சென்னை அழைத்துவரப்பட்டார் நடிகை மீரா மிதுன் - தன் கையை போலீசார் உடைத்ததாக கதறல்
பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை சென்னை அழைத்து வந்தனர் சைபர் கிரைம் போலீசார்.
நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நடிகை மீராமிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், மீராமிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கான விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து அன்றைய தினமே, தன்னை யாராலும் கைது செய்ய முடியாது. அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப்போல் நானும் இருப்பேன் என பேசி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் தலைமறைவாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மீராமிதுன் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது குறித்து, சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர விடுதிக்குச் சென்று மீராமிதுனை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து இன்று நடிகை மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்பட்டார்.அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் என் கையை உடைத்து போலீஸ் அராஜகம் செய்வத கூச்சலிட்டார்.
மேலும் 24 மணி நேரமா எனக்கு சாப்பாடு சொடுக்கவில்லை 3 வருசமா நான் குடுத்த புகார்ல எந்த கிரிமினல் மேலயும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என்றார்.
இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.