“ஜெயிலுக்குள்ளேயே இருங்க” - நடிகை மீராமிதுனின் ஜாமீன் ரத்து

மீராமிதுன் Actress meeramithun
By Petchi Avudaiappan Aug 23, 2021 04:06 PM GMT
Report

 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் நடிகை மீராமிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சமுதாய மக்களை அவதூறாக பேசும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது இதையடுத்து மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேரளாவில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் கைதானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் வழங்க கூடாது என விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரின் ஆண் நண்பருடன் இணைந்தே, இந்த வீடியோக்களை இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்து வருகின்றார். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது. இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வகுமார், புலன் விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாலும், சிறையில்அடைத்து மிகக்குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.