உக்ரைன் போரில் கொல்லப்பட்ட மாணவர் உடல் இந்தியா வந்தது - முதலமைச்சர் நேரில் அஞ்சலி
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் உடல் இந்தியா வந்தடைந்தது.
நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனின் முடிவு, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனும் பதில் தாக்குதல் கொடுப்பதால் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த மார்ச் 1 ஆம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராதவிதமாக கர்நாடக மாநிலம் சலகேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் கொல்லப்பட்டார். இவர் கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். நவீனின் உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நிலவியது.
இதனை தொடர்ந்து மாணவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிக்கு பின் நவீனின் உடல் இன்று காலை 3.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மாணவர் நவீன் உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் உடலை மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதன்பின் நவீன் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் சலகேரி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.