அதிகரிக்கும் அம்மை நோய் பாதிப்பு - கூடுதல் தடுப்பூசி செலுத்த உத்தரவு
இந்தியாவில் சில மாநிலங்களில் அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகரிக்கும் அம்மை நோய் பாதிப்பு
பீஹார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் அம்மை நோய் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை மாநகராட்சி மற்றும் பல மாவட்டங்களில் குழந்தைகள் அம்மை நோய்க்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் அசோக் பாபு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இது குறித்து அந்தந்த மாநிலங்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அம்மை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தலாம் .
குறிப்பாக ஒன்பது மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ் செலுத்தலாம்.
இதே போல் முதல் இரண்டு தடுப்பூசி செலுத்தப்படுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.