முதலமைச்சர் நடத்தியது அரசியல் நாடகம் - முன்னாள் முதலமைச்சர் மாயாவதி !
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தியது அரசியல் ஆதாய நாடகம் என்று முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
சிறுநீர் கழித்த விவகாரம்
மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஷ் சுக்லாஎன்ற நபர் தஷ்மத் ராவத் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் போலீசார் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்தது.
இந்நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அந்த பழங்குடியின இளைஞரை வரவழைத்து இருக்கையில் அமரவைத்து அவரது காலை கழுவினார். மேலும், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பிவைத்தார்.
முதலமைச்சர் நடத்தியது அரசியல் ஆதாய நாடகம்
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி "மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போபாலுக்கு வரவழைத்து, முதல்வர் இல்லத்தில் கேமராக்கள் மத்தியில் பாதிக்கப்பட்டவரின் கால்களை முதல்வர் கழுவினார்.
இது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பது போல் தெரியவில்லை, நாடகங்கள் மற்றும் தேர்தல் ஆதாய அரசியல் போன்றது. அத்தகைய கண்காட்சி பொருத்தமானதா?. மத்திய பிரதேச மக்கள் குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தங்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை பற்றிய கணக்கை கண்டிப்பாகக் கோருவார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.