தாக்கப்படும் மீனவர்கள் - இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர்
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை கடற்படை தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு முன்பு கடும் தாக்குதல் நடத்தினர். இரும்பு ரோப் கொண்டு தாக்கி உள் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் படகில் இருந்த இன்ஜின், ஜிபிஎஸ், தூண்டில், பேட்டரி ஆகியவற்றை எடுத்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மே17 இயக்கம் ஆர்பாட்டம்
இந்த நிலையில் மீனவர்களை எல்லை கடந்து இலங்கை ராணுவம் தாக்கியதாக குற்றம்சாட்டிய மே 17 இயக்கம் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று இலங்கை தூதரகம் அருகே திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், மீனவர்கள் தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.