புத்தாண்டில் பெரும் சோகம் : காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் நெரிசல்- 12 பேர் பலி
ஜம்மு ரேசாய் மாவட்டத்திலுள்ள கத்ரா நகரில் திரிகுதா மலைப்பகுதியில் ஆயிரத்து 700 அடி உயரத்தில் வைஷ்ணவ் மாதா கோவில் உள்ளது. குகையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்று அதிகாலையில் சாமி தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
அப்போது குகையில் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் , தீயணைப்பு படையினர் , கோவில் ஊழியர்கள் என அனைவரும் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக வைஷ்ணவ் தேவி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாதா வைஷ்ணவ் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.