துப்புரவு தொழிலாளி மீது மரம் சாய்ந்து விபத்து : மேம்பாலப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த விபரீதம்
மேம்பாலப் பணிக்காக மரத்தை அகற்றிய போது துப்புரவு தொழிலாளி மீது மரம் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மரத்தை அகற்ற முயன்ற போது துப்புரவுத் தொழிலாளி மீது மரம் விழுந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.
கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
உக்கடத்தில் இருந்து பேரூர் பைபாஸ் சாலையில் ரவுண்டானா பாலம் அமைய உள்ளதால், சி.எம்.சி காலனி பகுதியிலிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்த மக்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மேம்பாலம் அமைப்பதற்காக சி.எம்.சி காலணி பகுதியிலிருந்த அரச மரத்தை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த அரச மரம் சாய்ந்தபோது அருகே நின்று கொண்டிருந்த மாநகராட்சி துப்புரவு பணியாளரான சுரேஷ் என்பவரது மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ராட்சத மரத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுரேஷை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலம் அமைக்கும் பணிக்காக மரம் அகற்றிய போது, துப்புறவு தொழிலாளி மீது மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.