தோனியை ரன்-அவுட் பண்ணது ஒரு குத்தமா..? தற்போதுவரை இந்திய ரசிகர்கள் என்னை.. - கப்டில் வேதனை!
எம்எஸ் தோனியை ரன்-அவுட் செய்ததற்கு, இந்திய ரசிகர்களிடம் இருந்து வெறுப்பூட்டும் மின்னஞ்சல்கள் வருவதாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் தெரிவித்துள்ளார்.
தோனி ரன்-அவுட்
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் எம்எஸ் தோனி ரன்-அவுட் ஆனது இன்றளவும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.
இந்திய அணியின் அரையிறுதி தோல்விக்கு இதுதான் காரணமாகவும் சொல்லப்படுகிறது. தோனியை ரன்-அவுட் செய்தது நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் ஆவார். இந்நிலையில் இது தொடர்பாக கப்டில் பேசியதாவது "தோனி அடித்த பந்து மேலே செல்வதைப் பார்த்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அந்த பந்து என்னை நோக்கி ஒருவிதமாக வந்தது.
கப்டில் வேதனை
பந்தை பிடிப்பதற்கு வேகமாக ஓடினேன். அப்போது பந்தை ஸ்டம்ப்களில் எறிவதற்கான வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒன்றரை ஸ்டம்புகள் மட்டுமே என் பார்வைக்கு தெரிந்தன.
இருப்பினும் நான் ஸ்டம்பை நோக்கி அடிக்க முயற்சித்தேன். எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அந்த கனத்தில் துல்லியமாக பந்து ஸ்டம்பை அடித்தது. இதனால், நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனார்.
மேலும் அதை பற்றி கூறவேண்டுமானால், அந்த ரன் அவுட் நடந்ததற்கு பிறகு மொத்த இந்தியாவிற்கும் என்னை பிடிக்கவில்லை. இந்திய ரசிகர்களிடம் இருந்து தற்போது வரையிலும் எனக்கு ஏராளமான வெறுப்பூட்டும் மின்னஞ்சல்கள் வருகின்றன" என்று கப்தில் கூறியுள்ளார்.