தனக்குத்தானே திருமணம்.... - "இப்படியான திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது" - சுனிதா சுக்லா
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனைத்தானே திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது .
ஆனால் , இந்த திருமணத்தில் மணமகனை தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. ஆம்.. அந்தப் பெண் தன்னையே திருமணம் செய்து கொள்ளப்போகிறார். இவ்வாறு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடக்க உள்ளது.
இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில் :
சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். திருமணம் என்னும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன் எனக் கூறினார்.
மேலும் பிரபல நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார்.
இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை.
திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என கூறியுள்ளார். மேலும், பெண்கள் தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வார்கள்.
இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான் என்றும் தனது திருமணம் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார்.
திருமணம் முடிந்த பின்னர் 2 வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கும் செல்ல உள்ளார்.
இந்நிலையில், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். எந்தக் கோவிலிலும் இப்படியான திருமணம் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாஜகவின் சுனிதா சுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.