கூகுள் மீட் மூலம் கல்யாணம்...சோமேட்டோ மூலம் திருமண விருந்து : மணமக்களின் வித்தியாசமான முடிவு
மேற்கு வங்கத்தில் திருமணமாகவுள்ள ஜோடி எடுத்துள்ள வித்தியாசமான முடிவு அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக திருமணம் உள்ளிட்ட பல விஷேச நிகழ்ச்சிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து தடபுடலாக திருமணம் செய்யலாம் என நினைத்த மணமக்கள் விழிபிதுங்கியுள்ளனர். இவர்களுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் திருமணமாகவுள்ள ஜோடி எடுத்துள்ள வித்தியாசமான முடிவு அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த ஜோடி கொரோனா தொற்றின் காரணமாக தங்களது திருமணத்தை வரும் 24 ஆம் தேதி கூகுள் மீட் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது.இதில் சுமார் 450 உறவினர்கள் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 200 பேர் வரை தான் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென மேற்கு வங்க அரசும் அறிவித்துள்ளது.
திருமணம் என்ற பெயரில் எனது உறவினர்களை அழைத்து, அவர்களின் நிலைமையைக் கடினமாக்க நாங்கள் விரும்பவில்லை. இதனால், எங்களின் உறவினர்களை ஆன்லைன் மூலம், ஒன்றிணைக்க முடிவு செய்தோம். அது மட்டுமில்லாமல், அவர்கள் அனைவருக்கும் சோமாடோ மூலம், உணவு டெலிவரி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என மணமகன் சந்தீப் சர்க்கார் கூறியுள்ளார்.
அதேசமயம் இத்தகைய சூழ்நிலையில், நேரில் வந்து, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, நிச்சயம் பல பேர் தயங்குவார்கள். இதனால், நாங்கள் போட்டுள்ள திட்டம் தான் சிறந்தது. எங்களின் விருந்தினர்களின் உயிருக்கும் அது பாதுகாப்பாக இருக்கும் என மணமகள் அதிதி கூறியுள்ளார். இவர்களின் இந்த திட்டத்தை சோமாடோ நிறுவனம் பாராட்டி தள்ளியுள்ளது.