திடீரென உள்வாங்கும் குமரிக் கடல் : பேராபத்து உள்ளதா?
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் நீர் உள்வாங்குவது, நீர் மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் நீர் நிறம் மாறுவது போன்ற விஷயங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் கடல் நீர்மட்டம் திடீரென உள்வாங்கியது.
இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நீர் மட்டம் உள்வாங்கி இருக்கிறது. இதனால், கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிகிறது.
இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஒரு சிலர் கடலுக்குள் சென்று பாறைகள் மேல் நின்று புகைப்படமும், செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை கவனித்த கடலோர போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.