மணிப்பூரையும் பாஜகவிடம் இழந்த காங்கிரஸ் - அரசியல் பின்னணி!
மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது. இதன் தலை நகரம் இம்பால். இது ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது.
மணிப்பூர்
இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர்.
அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள். 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்கள் மட்டும் இருந்தது. பின்னர் 8 டிசம்பர் 2016-இல் 7 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டதால் தற்போது 16 மாவட்டங்கள் உள்ளது.
கோயெரிங் சிங்
இம்மாநிலத்தில் முதல் முதலாக மைரேம்பம் கோயெரிங் சிங் என்பவர் முதல்வராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். அதன்பின் சில முறை மாநிலம் குடியரசு ஆட்சியின் கீழ் இருந்தது.
குடியரசு ஆட்சி
அதனைத் தொடர்ந்து ரிசாங் கேசிங், ராஜ் குமார் ஜெய்சந்திர சிங், ராஜ் குமார் தோரேந்திர சிங், வாக்பம்பம் நிபமாச்சா சிங், போன்ற முன்னாள் முதலமைச்சர்கள் சில சில ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ந்தனர்.
ஓக்ரம் இபோபி சிங்
அதனையடுத்து, காங்கிரஸ் உறுப்பினரான ஓக்ரம் இபோபி சிங் 2002 முதல் 2017 வரை முதலமைச்சர் பதிவியில் நீடித்தார். 2008ல் மாநில போராட்டக்காரர்கள் சிலர் இவரது வீட்டை எறிகணை வீச்சு கொண்டு தாக்கினர். வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த ஓக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி தப்பித்தனர்.
காவலர் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்கியவர்கள் இதுவரை பிடிபடவில்லை. மணிப்பூரில் புரட்சியைத் தடுக்கும் விதமாக திட்டங்களை நிறைவேற்றாதிருக்க முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. இவர்தான் நீண்ட வருடம்(15) ஆட்சியில் இருந்த பெருமை பெற்றவர்.
நாங்தோம்பம் பீரேன் சிங்
இவரைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த முதலாவது நபராக நாங்தோம்பம் பீரேன் சிங் 2017 ல் முதலமைச்சரானார். இவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவார். 60 இடங்களைக்கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2017 -ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பிடித்தது. பாஜகவோ 21 இடங்களைப் பிடித்தது.
சில சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தலா 4 உறுப்பினர்களைப் பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேச்சையுடன் ஆட்சியைப் பிடித்தது.
கால் பதித்த பாஜக
அதன்பின் ஆட்சி நிறைவடைந்த நிலையில் 2022 தேர்தலில் பாஜக 60 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தது. மேலும், நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டன. இவர்கள் மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றதால், ந. பீரேன் சிங் மீண்டும் பதவியில் அமர்ந்தார்.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் நடந்ததும் தங்கள் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதனால் கலவரம் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பதட்டத்தை தணிக்க இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மேலும் 2 மாதங்கள் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கோட்டையை மீட்குமா காங்கிரஸ்
தொடர்ந்து சமீபத்தில் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஶ்ரீ அனுசுயா- மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இங்கு குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாக உள்ளது.
அண்மையில் கூட தாலைநகரான இம்பாலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதுகுறித்து முதல்வர், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகள்தான் இத்தகைய குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதி நீடித்து வருகிறது. இதனால் விரக்தியடைந்துள்ள சமூக விரோதிகள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்றார். மத்திய அரசு, நாகா அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்த இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நம்பிக்கை தெரிவித்தார்.
தன்னுடைய கோட்டையாக வைத்திருந்த மணிப்பூரை காங்கிரஸ், பாஜகவிற்கு தாரை வார்த்துவிட்டது. தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்குமா பாஜக என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.