கடனுக்கு மது வழங்காததால் ஆத்திரம் - மதுக்கடை ஊழியரை பாட்டிலால் குத்தி கொலை முயற்சி
கடனுக்கு மது வழங்காததால் மதுபான கடை ஊழியர்களை ஐந்து நபர்கள் பாட்டிலால் குத்தி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் மது குடிக்க சென்ற நிலையில், குடிப்பதற்காக மதுபானத்தை கடனாக கேட்டுள்ளனர்.
அங்கு பணிபுரியும் சூரியமூர்த்தி ராமர் சந்திரன் ஆகியோரிடம் அந்த ஐந்து நண்பர்களும் கடனுக்கு மதுபானம் கேட்டு வம்பிழுத்த நிலையில் கடன் கொடுக்க முடியாது என சூரியமூர்த்தி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 5 நபர்களும் மதுபானக் கடையில் உள்ள பாட்டில்களை உடைத்து சூரிய மூர்த்தியை பாட்டிலாலும் கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் இருந்த சூரிய மூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நடந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஐந்து நண்பர்களும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.