கடன் தொல்லையால் வீட்டை விற்கவிருந்த நபருக்கு அடித்த ஜாக்பாட் - கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி சேர்த்து ஒருவர் பணம் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அதிர்ஷ்டம் ஒருவருக்கு நடந்திருக்கிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் (பாவா என்றும் இவரைச் செல்லமாக அழைக்கிறார்கள்)
இவர் ஒரு பெயின்டர். கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மஞ்சேஸ்வரத்தைச் சேர்ந்த இவருக்குத் தான் சமீபத்தில் கேரள மாநில லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. எல்லா தகப்பன்களும் எதிர்கொள்வதைப் போல, மொஹம்மத் பாவாவும் தன் குடும்பம் குழந்தை குட்டிகளுக்கு கடன் வாங்கி செலவழித்திருக்கிறார்.
இவரது மகளின் திருமணம், வீட்டுப் பணிகளை நிறைவு செய்ய, மகன் நிசாமுதீனை கத்தார் நாட்டுக்குச் அனுப்பி வைக்க... என அவர் வாங்கிய கடன் தொகை வட்டி எல்லாம் சேர்ந்து 50 லட்சம் ரூபாயைத் தொட்டுவிட்டது.
மொஹம்மத் பாவாவால் கடனை சரியாகச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், உறவினர்கள் கடனைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே கையில் இருக்கும் ஒரே சொத்தான சுமார் 2,000 சதுர அடி வீட்டை விற்று கடனைத் திருப்பிச் செலுத்தவிடலாம் என முடிவு செய்தார்.
இதற்கிடையில் ஹொசங்காடியில் உள்ள அம்மா லாட்டரி ஏஜென்சியில் ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி இருந்தார். மறுபக்கம் மொஹம்மத் தரகர் வழி வீட்டை வாங்க விரும்புவோருக்கு வீட்டை எல்லாம் சுற்றிக் காட்டி கிட்டத்தட்ட விலை எல்லாம் கூட பேசி முடித்துவிட்டார்கள்.
வீட்டை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையை வாங்க வேண்டியது தான் பாக்கி. கடந்த திங்கட்கிழமை, கச்சிதமாக அட்வான்ஸ் வாங்குவதற்கு கொஞ்ச நேரம் முன், மொஹம்மத் பாவாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகச் செய்தி வந்தது.
அரசின் வரிப் பிடித்தம் எல்லாம் போக மனிதருக்கு 63 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும். லாட்டரி கிடைத்த மகிழ்ச்சியில், வீட்டை விற்பதில்லை என முடிவு செய்திருக்கிறார்.
லாட்டரி பணம் கையில் வந்த பின் 50 லட்சம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தில் மொஹம்மத் பாவா மகிழ்ச்சியாக தன் வாழ்கையை நடத்திக் கொள்ளவிருக்கிறார். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெற்ற மொஹம்மத் பாவா சேட்டனுக்கு நம் வாழ்த்துக்கள்.