இறந்ததாக அடக்கம் செய்துவிட்டு வந்த மகன் - ஒரு வாரத்தில் மீண்டும் வந்த தந்தை
ஈரோடு அருகே இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மேற்கொண்டு வரும் அவர் அதனடிப்படையில் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக வீட்டை விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் பல மாதங்கள் கடந்த பின்னும் மூர்த்தியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரும் திரும்பி வராததால் மகன்களான கார்த்தி மற்றும் பிரபு ஆகியோர் பல இடங்களில் இருவரும் தேடியும் தங்களது தந்தையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கார்த்திக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் அங்குச் சென்ற கார்த்தி அது தனது தந்தை தானா என கண்டுபிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த சடலத்தின் முகம் மோசமாக சிதைவடைந்து இருந்ததால் கார்த்தி சடலத்தின் உடலை வைத்து அது தனது தந்தை தான் என்ற முடிவுக்கு வந்துள்ளார். பின்னர் காவல்துறையினரிடம் நடந்ததை விவரித்து அந்த சடலத்தை எடுத்து வந்து சொந்த ஊரில் கார்த்தி அடக்கம் செய்து இருக்கிறார்.
இதனிடையே நேற்று முன்தினம் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு வந்த கார்த்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வெளியூருக்கு வேலைக்காகச் சென்ற மூர்த்தி வீடு திரும்பியதும் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியில் பார்த்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இறந்து போனதாக கருதப்பட்ட மூர்த்தி, உயிருடன் திரும்பி வந்த நிலையில் இறந்து போனதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட டலம் குறித்து காவல்துறையினர் மீண்டும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.