தாயின் இறந்த உடலுடன் ஓராண்டாக அறையில் பதுக்கி இருந்த மகன் - பொதுமக்கள் அதிர்ச்சி
ஆஸ்திரியா நாட்டில், தாய் உயிருடன் இருப்பது போல் நாடகமாடி மகன் ஓய்வூதியம் பெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஆனால் அவரது மகன் தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல் தனது வீட்டின் பாதாள அறையில் ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை வைத்து பாதுகாத்து, துர்நாற்றம் வராமல் தடுத்துள்ளார்.
மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் தாயின் ஓய்வூதியத் தொகையாக ரூ. 36 லட்சம் வரைப் பெற்று அரசை ஏமாற்றியுள்ளார். இதனிடையே புதிதாக அந்தப் பகுதியில் வேலையில் சேர்ந்த தபால்காரர், 'ஓய்வூதியம் பெறும் அந்த மூதாட்டியை நேரில் பார்க்க வேண்டும்' என கூறிய போது, அவரது மகன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து தபால்காரர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இறந்து போன தாயின் உடலை பாதாள அறையில் வைத்து விட்டு அவரது ஓய்வூதியத்தை மகன் வாங்கி வந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.