நாய்களுடன் கூண்டில் இருந்த 6 குழந்தைகள் - சோறு, தண்ணியின்றி டார்ச்சர் செய்த சைக்கோ!
குழந்தைகளை நாய் அடைக்கும் கூண்டில் வைத்து டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டார்ச்சர்
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வருபவர் டிராவிஸ் டாஸ், 31 வயதான இவருக்கு 33 வயதான அமண்டா ஸ்டாம்பர் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
திடீரென வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்திருக்கிறார். போலீசார் அங்கு சென்று பார்த்தபொழுது பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணை
இந்நிலையில், அந்த குழந்தைகளில் ஒருவருக்கு கண்ணில் அடித்தது போல பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், ஒருவர் அவரது தந்தையால் மிக மோசமாக தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் புகாரளித்த குழந்தைகளின் தாயிடம் ஏன் முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்டபொழுது அவர், "நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.
எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்" என்று கூறினார். மேலும், விசாரணைக்கு பின்னர், பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.