ஓனரை கேட்காமல் கடையில் சமோசா சாப்பிட்ட வாடிக்கையாளர் அடித்துக்கொலை
கடை உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்டதற்காக வாடிக்கையாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள சோலா என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சீத்தாராம் என்ற மகன் உள்ள நிலையில் இருவரும் கடையை பார்த்துக் கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது கடைக்கு அதே பகுதியில் வசித்து வரும் வினோத் என்பர் வந்துள்ளார். பயங்கரமான குடிபோதையில் வினோத் இருந்துள்ள நிலையில், கடை முதலாளியான ஹரி சிங்கிடம் கேட்காமலேயே கடையில் இருந்த சமோசாவை எடுத்து சாப்பிட்ட முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த உரிமையாளர் ஹரி அவரை கண்டித்துள்ளார். பதிலுக்கு போதையில் இருந்த வினோத்தும் ஹரியிடம் மோசமாக திட்டி பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அது கைகலப்பாக மாறி வினோத்தை டீ போடும் பாத்திரம் மற்றும் பெரிய கம்பை கொண்டு ஹரி மற்றும் அவரது மகன் சீத்தாராம் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வினோத்தின் தாயார் ரமாவதி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹரிசிங்கும் அவரது மகனும் முதலில் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இருவரை தேடிய காவல்துறை நேற்று கைது செய்தனர்.
மேலும் இரு குடும்பங்களும் ஒரே பகுதியில் வசித்துவரும் நிலையில் இருவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.