பணத்தகராறு காரணமாக பெற்ற மகனை தீ வைத்து கொளுத்திய தந்தை - பதறவைக்கும் காட்சிகள்
கர்நாடகாவில் பணத்தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சாம்ராஜ்பேட் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் பாபு என்கிற சுரேந்திர குமார் என்பவர் தனது உலோகம் சார்ந்த தொழிலை நிர்வாகிக்கும் பொறுப்பை 25 வயதான தனது மகன் அர்பித் சேட்டியாவிடம் வழங்கியிருந்துள்ளார்.
அந்த தொழிலுக்காக தனது மகனுக்கு அவர் சுமார் 1.5 கோடி ரூபாய் வழங்கி இருந்தார். இதனிடையே பணம் குறித்த கணக்குகளை தனக்கு தரும்படி பலமுறை தந்தை சுரேந்திர குமார் மகனிடம் கேட்டும் அர்பித் சேட்டியா அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த தந்தை சுரேந்திர குமார் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மகன் அர்பித் சேட்டியா மீது பெயின்ட் தின்னர் ரசாயனத்தை ஊற்றி அதன் பிறகு நெருப்பு வைத்துள்ளார். இதில் அர்பித் தீப்பிடித்து அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து நெருப்பு வைத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.