150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
ஊட்டிக்கு சுற்றுலா வந்த வாலிபர் ஒருவர் 150 அடி பள்ளத்தில் தவறி விழ வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சிவகுருநாதன்(வயது 28), சில தினங்களுக்கு முன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு ஹொட்டல் அறை ஒன்றில் தங்கி சுற்றுலாதளங்களை பார்வையிட்டு வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா சென்ற போது தடை செய்யப்பட்ட பகுதியில் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதில் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் தான் தங்கியிருந்த ஹொட்டலுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் டிரோனை பறக்கவிட்டு தேடினர், அப்போது 150 அடி ஆழத்தில் பாறையில் சிக்கி இருந்தது தெரியவந்தது.
அவருடன் உயிருடன் இருந்ததையும் பொலிசார் உறுதி செய்தனர், இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர்.
வாலிபரின் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக குன்னூர் ராணுவ மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் வந்து மீட்பு பணியை தொடங்கினர்.
12 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டார், உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.