மொட்டை மாடியில் தூங்கிய பஸ் டிரைவர் - கடைசியில் உயிரிழந்த பரிதாபம்
திருவண்ணாமலையில் மொட்டை மாடியில் தூங்கிய பஸ் டிரைவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் தாய், தந்தை இறந்துவிட்டதால் சசிகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 12 ஆம் தேதி அதிகாலை சசிகுமார் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டு இருந்தபோது திடீர் என்று எழுந்த சசிகுமார் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்தாக கூறப்படுகிறது.
இதில் மாடியில் விளிம்புக்கு சென்ற அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சசிகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.