அனுமதியின்றி செயல்பட்டு வந்த வெடிமருந்து குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் க.மாமனந்தல் அருகே அனுமதியின்றி செயல்பட்ட வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காமனந்தல் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் ஷபிபுல்லா என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அப்போது அங்கு வேலை பார்த்து வந்த கருணாபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
கடந்த சில வருடங்களாக இந்த வெடி மருந்து குடோன் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததும் இங்கு நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை வெடிகளும் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.