செங்கல்பட்டில் மனைவியை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்: போலிஸில் புகார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்துள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (26) என்பவரை காதலித்து கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 4 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.
இந்நிலையில் விமல்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புக்கத்துறை பகுதியைச் சேர்ந்த மீனா என்பவரை முதல் மனைவிக்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த முதல் மனைவி மோனிஷா அப்பொழுதே செங்கல்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .அப்போது விசாரித்த பொழுது விமல் ராஜ் திருமணம் செய்து கொண்ட இரண்டாவது மனைவி மீனா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி உள்ளார்கள்.
இதனை உண்மை என்று நம்பிய மோனிஷா மனிதாபிமான அடிப்படையில் அந்த வழக்கை சமாதானம் செய்துகொண்டு வாபஸ் பெற்றுள்ளார். வாபஸ் பெற்றுக் கொண்ட பிறகுதான் மீனா கர்ப்பமாக இல்லை என அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் விமல் ராஜ் மற்றும் மோனிஷாக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் சிறு சிறு சண்டைகள் நடந்தவண்ணம் இருந்துள்ளன.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் புக்கத்துறை குமாரவாடி பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை விமல் ராஜின் முதல் மனைவி மோனிஷா விமலின் செல்போனில் இருந்த புகைப்படத்தை வைத்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது மோனிஷாவை அடித்துக் கொன்றுவிடுவேன் உன்னால் எனக்கு எப்போதும் பிரச்சனை எனக் கூறி அடித்து துன்புறுத்தியதாக மோனிஷா புகார் அளித்துள்ளார்.
மேலும் இப்பொழுது அவர் இன்னும் பல பெண்களுடன் தனக்கு திருமணம் ஆகவில்லை என பேசி வருவதாகவும். இது குறித்து கடந்த 25ஆம் தேதி கேட்டபொழுது நான் அப்படித்தான் பண்ணுவேன் உன்னால் என்ன பண்ணமுடிம் இன்னும் எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணுவேன் அதை நீ கேக்க கூடாது என மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த புகார் மனுவில் பல பெண்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனக்கும் தன்னுடைய மகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.