சிறை தண்டனை வழங்கிய பெண் நீதிபதி; பாய்ந்து தாக்கிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு!
குற்றவாளி ஒருவர் பெண் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், டியோப்ரா ரெட்டன் (30) என்பவர் ஒரு தாக்குதல் வழக்கில் கைதானார்.
இவர் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்தியதற்கும், அதில் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டதாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நிவேடா நகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து ரெட்டன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேரி கே ஹால்தஸ் (62) என்ற பெண் நீதிபதி, அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தீர்ப்பை படித்துக் கொண்டிருந்தார்.
தாக்குதல்
ரெட்டனின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தும், அதனை நீதிபதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி ரெட்டன், நீதிபதியை மேஜை மீது பாய்ந்து தாக்கினார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்த தாக்குதலில் நீதிபதி மேரிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. நீதிமன்ற பாதுகாவலாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.