மதத்தை அவமதித்ததாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர் - 80 பேரை கைது செய்த போலீசார்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மதத்தை அவமதித்ததாக ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த ஆலை மேலாளர் பிரியந்தகுமாரா என்பவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் மீண்டும் அங்கு மதத்தை அவமதித்ததாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அங்குள்ள கானேவால் மாவட்டத்தில் தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதத்தை அவமதித்ததாக கூறி ஒருவரை பலர் கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழக்க அவரது உடலை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட நபர் கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.