இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் தேவை - மம்தா பேனர்ஜி புதிய கோரிக்கை
இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவம் என்றொரு அமைப்பினை உருவாக்கி அதில், குஜராத், வங்காளம் மற்றும் தமிழகம் உள்பட ஒவ்வொரு மக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
பிரிட்டிஷாரின் நம்மை பிரித்து, ஆட்சி செய்யும் கொள்கைக்கு எதிராக நின்றவர் என்று கூறினார். இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் கட்டாயம் தேவை. இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு இந்தியா முழுவதும் ஆட்சி செய்தனர்.
நம்முடைய நாட்டில் ஏன் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தேசநாயகர் தினம் என்று நாம் இன்று கொண்டாடி வருகிறோம். ஏனெனில் நேதாஜியை ரவீந்திரநாத் தாகூர் தேசநாயகர் என அழைத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.