2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இவர் தான் - கொல்கத்தாவில் ஒலித்த ஒற்றைப் பெயர்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மோலாய் கடாக் கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரத்யா பாசு, பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார். இதனிடையே எங்களைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியை 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாட்டின் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என விரும்புகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளில் இணைந்ததில் பெருமிதம் கொள்கிறோம். நிச்சயம் பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாங்கள் வீழ்த்துவோம் என பிரத்யா பாசு கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லி, மும்பையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் மமதா பானர்ஜி நடத்தினார். காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்பது மமதாவின் இலக்கு. அதனால்தான் மாநில கட்சிகள் மட்டுமே ஒருங்கிணைந்து செயல்பட்டால் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.