மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 அகதிகள் பலியான பரிதாபம்
மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 அகதிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென கவிழ்ந்த நிலையில் அதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலேசிய கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 11 அகதிகள் பலியாகினர். மேலும் 25 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.