எப்படி கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் போகலாம்? விளக்கம் கேட்கும் தமிழக அரசு!
‛கொரோனா விதிகளின் படி சிகிச்சை பெற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும். சிகிச்சையிலிருந்து கமல் நேரடியாக சூட்டிங்கில் பங்கேற்றதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்'
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் கடந்த மாதம் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியிருந்தார்.
அப்போது அவருக்கு இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து உடனே பரிசோதனை செய்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேராக பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு சென்றார்.
படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கொரோனா விதிகளின் படி சிகிச்சை பெற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.
சிகிச்சையிலிருந்து கமல் நேரடியாக சூட்டிங்கில் பங்கேற்றதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 24 ம் தேதி தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து நேரடியாக அவர் பிக்பாஸ் செட்டிற்கு சென்று அங்கு சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற விதி இருப்பதால், அந்த விதியை கமல் மீறியதாக கூறப்படுகிறது.