மக்கள் நீதி மய்யம் தொடக்கமும்...கட்சி நிர்வாகிகளின் தொடர் விலகலும்..!
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அக்கட்சி சந்தித்து வந்த சவால்களை சற்று விரிவாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தொடக்கம்
மக்கள் நீதி மய்யம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி 2018 ஆண்டு மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமது கட்சி மற்றும் கொடியின் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக இருந்த கமல்ஹாசன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பையும் ஏற்றார்.
இக்கட்சியின் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி துணைத் தலைவர்களாக மவுரிய, தங்கவேலு நியமிக்கப்பட்டனர்.
தொடர் தோல்வி
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 3.7 சதவீத வாக்குகளை பெற்றது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்து கட்சியுடன் கூட்டணி வைத்து களம் இறங்கியது மக்கள் நீதி மய்யம்.
நாடாளுமன்ற தேர்தலில் 3.7 சதவீத வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
முக்கிய நிர்வாகிகள் விலகல்
தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்தால் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகியதால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து முருகானந்தம், சி.கே.குமரவேல், சந்தோஷ் பாபு, பத்மபிரியா, என ஒவ்வொருவராக விலக தொடங்கின.
மேலும் மாநில துணைச் செயலாளர் தொல்காப்பியன், மாநில இணைச் செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகினர்.
விலகிய அனைவரும் தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசன் தான் காரணம் என்று குற்றச்சாட்டு வைத்தனர். இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய கமல் புதிய நிர்வாகிகளை அதிரடி நியமனம் செய்தார்.
புதிய நிர்வாகிகள்
பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்
பொன்ராஜ் - அரசியல் ஆலோசகர்
தங்கவேலு - துணைத் தலைவர் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்)
செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு)
சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் ( கட்டமைப்பு)
சரத்பாபு - மாநிலச் செயலாளர் (தலைமை நிலையம்)
ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
ஜி.நாகராஜன் - நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மேற்கண்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து உத்தரவிட்டார் கமல்ஹாசன்.