ஏழைன்னா கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா ? - கொந்தளித்த கமல்ஹாசன்

kamalhaasan makkalneedhimaiam
By Irumporai Dec 10, 2021 06:11 AM GMT
Report

வள்ளியூர் செல்லும் பேருந்தில் பயணித்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வயதான ஆண்‌, ஒரு பெண்‌ மற்றும்‌ ஒரு குழந்தை ஆகியோரை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சேர்ந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் பரவ தொடங்க அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதேபோல் சமீபத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண் பேருந்தும் துர்நாற்றம் வீசுவதாக கூறி கீழே இறக்கி விடப்பட்ட நிலையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது.

நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.