திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் - பணம் பெற்ற குற்றச்சாட்டில் நடவடிக்கை!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மஹுவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்காக அவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவிடம் நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
பதவி நீக்கம்
இந்நிலையில் இன்று மக்களவையில் நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்த தீர்மானத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.