ஆட்சி கவிழும் நிலையில் ராஜபக்சே தலைமையிலான அரசு : இலங்கையில் நடப்பது என்ன?
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மகிந்தராஜபக்சே தலமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மந்திரி சபை கலைக்கப்பட்டு தற்காலிக மந்திரிகள் பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகளுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
இலங்கையில் நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொண்டன. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றனர்.
கூட்டணி கட்சிகளை சேர்ந்த 43-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசின் பலம் 102 உறுப்பினர்கள் ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அதேசமயம், அரசு பெரும்பான்மையை இழந்தபோதிலும் அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கே அதிக அதிகாரம் உள்ளதால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேலும் சில நாட்கள் ஆகலாம்.
அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலேயே மகிந்தா ராஜபக்சே அரசு கவிழும் என கூறுகின்றார் உலகளாவிய அரசியல் வல்லுநர்கள்.