இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா? - வெளியான அறிவிப்பு - பரபரப்பில் அரசியல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ‘கோ கோத்தபய கோ’ என்று கோஷங்களை முழங்கிக்கொண்டு வருகிறார்கள்.
மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி, கொழும்பு காலிமுகத் திடலில் இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
மேலும், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், என்ன ஆனாலும், நான் பிரதமர் பதவியிலிருந்து விலகவே முடியாது என்றும், என் தலைமையில்தான் இடைக்கால அரசாங்கம் அமையும் என்றும் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இவரின் இந்தப் பேச்சக்கு பவுத்த பிக்குகள் உள்ளிட்ட பல தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்சே இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமது பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அண்ணன் ராஜபக்சேவை பலிகடாவாக்குவதில் கோத்தபாய ராஜபக்சே படுமுனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
மகிந்த ராஜபக்சேவை பதவியிலிருந்து விரட்டிவிட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பது கோத்தபாயவின் திட்டம். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.
இக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி கோரியிருக்கிறார்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா செய்வார்; அது தொடர்பான அறிக்கையைத்தான் நாளை நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
