உக்ரைனில் சிக்கிய 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி யார் தெரியுமா?
உக்ரைனில் சிக்கிய மாணவர்களில் 800 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்த பெண் விமானி= மகாஸ்வேதா சக்கரவர்த்திக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதனிடையே உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்களை எப்படியாவது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ரோமானியா உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் இடம் பெயர்ந்தனர்.
இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரை 75 விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது. இதனால் உக்ரைனில் சிக்கிக்கொண்ட சுமார் 14,000 இந்தியர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வரும் மகாஸ்வேதா சக்கரவர்த்தி கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரையில் மொத்தம் 6 முறை மீட்பு விமானங்களை இயக்கியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த மகாஸ்வேதா மேற்கு வங்க மாநில பாஜக மகளிரணி தலைவர் தனுஜா சக்கரவர்த்தியின் மகளாவார். இவர் கிட்டதட்ட 800 மாணவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.