"வெடிகுண்டு வீசுறேன் இரு" - பாஜக மூத்த தலைவரை மிரட்டிய மகாராஷ்ட்ரா அமைச்சர்
மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் ஹைட்ரஜன் வெடிகுண்டு வீசுவேன் என்று பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் 26 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவராக சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்ட்ரா அமைச்சருமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை சுற்றி பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், போதைப்பொருள் விவகாரம் குறித்து மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிசும், அமைச்சர் நவாப் மாலிக்கிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவாப் மாலிக், தேவேந்திர பட்னாவிஸ் தொடர்பாக இன்று ஹைட்ரஜன் குண்டை வீசுவேன். தேவேந்திர பட்னாவிஸின் நிழல் உலக தொடர்புகளை அம்பலப்படுத்துவேன். தேவேந்திர பட்னாவிஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மற்றும் நிழல் உலகத்துடன் என்னை இணைத்து எனது புகழை கெடுக்க முயற்சிக்கிறார். அவருக்கு நான் சட்டப்படி நான் நோட்டீஸ் அனுப்புவேன் என கூறியுள்ளார்