வங்கி கணக்கில் விழுந்த ரூ.15 லட்சம்...பிரதமருக்கு நன்றி சொன்ன விவசாயி
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் தவறுதலாக விழுந்த நிலையில் வீடு கட்டி விட்டு பிரதமருக்கு விவசாயி நன்றி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுக்காவைச் சேர்ந்தவர் ஞனேஷ்வர். இவருக்கு உள்ளூர் வங்கியில் ஜன் தன் கணக்கில் ரூ.15 லட்சம் இருப்பதாக கணக்கை சோதித்த போது தெரியவந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஞனேஷ்வர் அந்த பணத்தை பிரதமர் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியப்படி தனது வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக நினைத்து அதில் 9 லட்சத்தை எடுத்த அழகான வீடு கட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தனது வங்கி கணக்கில் பணம் போட்ட விட்டதாக எண்ணி பிரதமருக்கு உற்சாகத்தில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் வங்கியிலிருந்து விவசாயி ஞனேஷ்வருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம் போடப்பட்டுவிட்டது.
அதை உடனே திரும்ப செலுத்துங்கள் என்றும் பிம்பல்வாடி கிராம மேம்பாட்டுக்கு அந்த நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது,ஆனால் தவறுதலாக உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.
என்று கூறி வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஞனேஷ்வர் பிரதமர் சொன்னபடி ரூ.15 லட்சம் அனுப்பி இருப்பதாக நினைத்து அந்த பணத்தை எடுத்து செலவு செய்தேன்.
பாக்கி ரூ.6 லட்சம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன் என்றார்.
இதனிடையே ஞனேஷ்வரிடம் இருந்து பணத்தை வசூலிக்க முடியாமல் வங்கி நிர்வாகம் திணறி வருகிறது.