மதுரையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்
எரிவாயு விலை உயர்வை கண்டித்து மதுரையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எல்.பி.ஜி சிலிண்டர் விலை தற்போது 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் 19 கிலோ எடைகொண்ட எல்.பி.ஜி சிலிண்டர் ரூ.2253 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் சென்னையில் 2406 ரூபாய்க்கும், மும்பையில் 2205 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தற்பொழுது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ.949.50 ஆகவும், சிலஇடங்களில் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையில், எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.