நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு!
பயணிகளிடம் விமானி ஒருவர் சகஜமாக உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை-அபுதாபி
இண்டிகோ நிறுவனம் சார்பில் மதுரையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். காலை 7.20 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு அபுதாபிக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும்.
விமானி கலகல..
மதுரையைச் சேர்ந்த விமானி தான் இந்த விமானத்தை இயக்கினார். முன்னதாக விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகளிடம் பேசிய அவர், "கதவை சாற்றிவிட்டு கிளம்பிவிடுவோம். சுமார் 3,000 கி.மீ தொலைவில் 4 மணி நேரம் பயணித்து அபுதாபியை அடைவோம்.
விமான சேவையை நன்கு என்ஜாய் செய்யுங்கள். நம்ம ஊர் விமானம் என்று ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீர்கள். அது இங்கு கிடைக்காது. நாம் புறப்படுவதற்கு தயாராகிவிட்டோம். எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்கள்.
உங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் நன்றி. வணக்கம்” என்று தமிழில் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.