மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம்
மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர்.இதனால் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். நடைமுறையில் இல்லாத இந்த உறுதி மொழி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார், இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நேரில் சந்தித்து விளக்கமளித்த நிலையில் மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மேலும், கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர், ரத்னா வேல் என்பதாலும் தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.