அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம்

madurai-high-court-order
By Nandhini Apr 19, 2021 09:49 AM GMT
Report

அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் போன்றவற்றிக்கு 50 சதவிகிதத்துடன் இயங்கலாம் என அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாகத் தடை விதிப்பது ஏற்கக்கூடியதாக இல்லை.

இதனால், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பலர் ஏமாற்றமடைவார்கள். ஆகவே பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த வழக்கு மனுவில் கூறியிருந்தார்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம் | Madurai High Court Order

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி பேசுகையில், கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் இது எவ்வாறு சாத்தியமாகும்? கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும், நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதோடு, வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை. வெறும் குப்பைகளே நிறைந்திருக்கிறது.

கொரோனா அதிகமாக பரவும் இந்த காலக்கட்டத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.