மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சின்ன மூலக்கரை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இட்லி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹோட்டலில் வேலை முடித்துவிட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு நெல்லையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியும் , மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். அவர்கள் அப்பெண்ணின் மனநல சிகிச்சைக்காக நெல்லையிலிருந்து மதுரை வந்துவிட்டு பின்னர் ரயிலுக்காக இரவு நேரத்தில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த பாலமுருகன், தானும் நெல்லைதான் எனக் கூறி மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்துள்ளான்.
பின் இருவருக்கும் பாலமுருகன், தேநீர் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு மூதாட்டி உறங்கிய பிறகு, மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மூதாட்டி திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியானதால் மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம் பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.