மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது - மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்!

Madurai Start மதுரை Chithirai சித்திரை Therottam தேரோட்டம்
By Thahir Apr 15, 2022 02:31 AM GMT
Report

புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலகலமாக தொடங்கியது.மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் பக்தர்கள் அனுமதியின்றி கோவிலின் உட்புறம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர்.

இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.

காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கினர். 2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.