இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா!
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளகாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது.
இந்த திருவிழா எளிமையாக நடந்தது இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
தேர் புதுப்பித்தல் பணி,மாசி வீதியில் தேர் வலம் வருவதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 12 நாட்கள் நடைபெறும் உலகபுகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.
விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.