மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக ஓபிஎஸ் மகன் நியமனம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதனால் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.
சுமார் 5.5 கி.மீ தூரத்துக்கு சுற்று சுவர் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் நக்கலடித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மோடி கட்டிய மருத்துவமனையை கையோடு கொண்டு வந்துள்ளேன் என்று கூறி செங்கல் ஒன்றைத் தூக்கி காட்டினார். உதயநிதியின் இந்த செயல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இந்நிலையில், அதிமுக எம்.பி ரவீந்திரநாத் மற்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் எம்.பி சு.வெங்கடேசன் விலகிக் கொண்டுள்ளதையடுத்து, இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.