50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடக்கம்!
மதுரையில் இன்று 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பொதுப்போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மதுரையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் போக்குவரத்து இயக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மதுரை மண்டலத்தில் 714 நகரப் பேருந்துகள், 120 புறநகர் பேருந்துகள் என மொத்தமாக 834 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் போக்குவரத்தை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வழித்தடங்களில் மக்கள் வரத்தின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
வெளியூர் செல்லூம் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெளியூர் செல்லூம் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா்.