கொரோனா பரவலைத் தடுக்க 14 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

அப்போது அவர் இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ’கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள தற்போதைய நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
கொரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கொரோனா பேரிடரின் போது அவ்வப்போதைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.