ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை அக்கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்திருந்தனர்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.