கடலில் விழுந்த ஹெலிகாப்டர் - 12 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த அமைச்சர்
மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவான மடகாஸ்கரில் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சரக்குகளை ஏற்றி செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனிடையே கடலில் சிக்கியவர்களை மீட்கும்நடவடிக்கையில் மடகாஸ்கர் மீட்புப்படை களமிறங்கியது.
அப்போது புறப்பட்ட ஹெலிகாப்டரில் அந்நாட்டு அமைச்சர் கேலேவும் இருந்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.இதையடுத்து கடலில் குதித்த கேலே 12 மணி நேரம் கடலில் நீந்தி அருகில் உள்ள மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்த மற்றொரு அதிகாரியும் உயிர் பிழைத்த நிலையில் ஹெலிகாப்டரின் கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவரின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.